2
கோத்திர முகாம்களின் ஒழுங்குமுறை 
 1 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:  2 “இஸ்ரயேலர் சபைக் கூடாரத்தைச் சுற்றி சற்றுத் தொலைவில் தங்கள் முகாம்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன்தன் சின்னத்தின்கீழ் குடும்பத்தின் கொடியுடன் இருக்கவேண்டும்.” 
 3 சூரிய உதயத்தை நோக்கிய கிழக்குப் பக்கத்தில், 
யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் முகாமிடவேண்டும். அம்மினதாபின் மகன் நகசோன், யூதா மக்களின் தலைவன்.  4 அவனுடைய பிரிவின் தொகை 74,600 பேர். 
 5 இசக்காரின் கோத்திரத்தார் அவர்களுக்கு அருகில் முகாமிடவேண்டும். சூவாரின் மகன் நெதனெயேல், இசக்கார் மக்களுக்குத் தலைவன்.  6 அவனுடைய பிரிவின் தொகை 54,400 பேர். 
 7 செபுலோனின் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் மக்களுக்குத் தலைவன்.  8 அவனுடைய பிரிவின் தொகை 57,400 பேர். 
 9 யூதாவின் பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,86,400 பேர். அவர்களே முதலில் புறப்படுவார்கள். 
 10 தென்புறத்தில் 
ரூபனின் முகாம் பிரிவுகள், தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். சேதேயூரின் மகன் எலிசூர், ரூபன் மக்களுக்குத் தலைவன்.  11 அவனுடைய பிரிவின் தொகை 46,500 பேர். 
 12 சிமியோன் கோத்திரம் அவர்களை அடுத்து முகாமிடவேண்டும். சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் மக்களுக்குத் தலைவன்.  13 அவனுடைய பிரிவின் தொகை 59,300 பேர். 
 14 காத் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். தேகுயேலின் மகன் எலியாசாப், காத் மக்களுக்குத் தலைவன்.  15 அவனுடைய பிரிவின் தொகை 45,650 பேர். 
 16 ரூபனுடைய பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,51,450 பேர். அவர்கள் இரண்டாவதாகப் புறப்படுவார்கள். 
 17 சபைக் கூடாரமும், லேவியரின் முகாமும் மற்ற முகாம்களுக்கு நடுவிலிருந்து புறப்படும். அவர்கள் தாம் முகாமிட்ட அதே ஒழுங்கின்படி ஒவ்வொருவரும் தன்தன் சின்னத்தின் கீழாகப் போவார்கள். 
 18 மேற்குப் பக்கத்தில் 
எப்பிராயீமின் முகாமின் பிரிவுகள், தங்கள் கொடியின்கீழ் இருக்கும். அம்மியூதின் மகன் எலிஷாமா, எப்பிராயீம் மக்களுக்குத் தலைவன்.  19 அவனுடைய பிரிவின் தொகை 40,500 பேர். 
 20 மனாசே கோத்திரம் அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும். பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே மக்களுக்குத் தலைவன்.  21 அவனுடைய பிரிவின் தொகை 32,200 பேர். 
 22 பென்யமீன் கோத்திரம் அதற்கு அடுத்ததாக இருக்கும். கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் மக்களுக்குத் தலைவன்.  23 அவனுடைய பிரிவின் தொகை 35,400 பேர். 
 24 எப்பிராயீமின் பக்கத்திற்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,08,100 பேர். அவர்கள் மூன்றாவதாகப் புறப்படுவார்கள். 
 25 வடக்குப் பக்கத்தில் 
தாண் முகாமின் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். அம்மிஷதாயின் மகன் அகியேசேர், தாண் மக்களுக்குத் தலைவன்.  26 அவனுடைய பிரிவின் தொகை 62,700 பேர். 
 27 ஆசேர் கோத்திரம் அவர்களை அடுத்ததாக முகாமிடவேண்டும். ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் மக்களுக்குத் தலைவன்.  28 அவனுடைய பிரிவின் தொகை 41,500 பேர். 
 29 நப்தலி கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏனானின் மகன் அகீரா, நப்தலி மக்களுக்குத் தலைவன்.  30 அவனுடைய பிரிவின் தொகை 53,400 பேர். 
 31 தாணின் பக்கத்திற்கு நியமிக்கப்பட்ட மனிதர்களின் மொத்தத்தொகை 1,57,600 பேர். அவர்கள் கடைசியாக தங்கள் கொடிகளின் கீழ் புறப்படுவார்கள். 
 32 அவரவருடைய குடும்பங்களின்படி கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்கள் இவர்களே. அவர்களுடைய பிரிவுகளின்படி முகாம்களில் இருந்த எல்லோருடைய எண்ணிக்கை 6,03,550 பேர்.  33 ஆனாலும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, லேவியர் மற்ற இஸ்ரயேலருடன் கணக்கிடப்படவில்லை. 
 34 அப்படியே யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள். அந்த முறையாக அவர்கள் தங்கள் கொடிகளின் கீழே முகாமிட்டு இருந்தார்கள். அவ்விதமாகவே அவர்கள் போகும்போது ஒவ்வொருவரும் தன் வம்சத்துடனும், குடும்பத்துடனும் புறப்பட்டார்கள்.