சங்கீதம் 7
பென்யமீனியனான கூஷின் வார்த்தையின் நிமித்தம் தாவீது யெகோவாவுக்கு பாடிய சிகாயோன் என்னும் சங்கீதம். 
 1 என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; 
என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். 
 2 இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, 
என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள். 
 3 என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து 
என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், 
 4 என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், 
அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், 
 5 அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; 
அவன் என்னைத் தரையில் தள்ளி, 
உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும். 
 6 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; 
என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். 
என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். 
 7 எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து 
நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். 
 8 யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். 
யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; 
மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். 
 9 சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற 
நீதியுள்ள இறைவனே, 
கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; 
நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும். 
 10 மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; 
இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். 
 11 இறைவன் நீதியுள்ள நீதிபதி; 
அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன். 
 12 கொடியவன் மனம் மாறாவிட்டால், 
இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; 
அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். 
 13 அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; 
எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார். 
 14 தீமையினால் நிறைந்தவர்களோ 
பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். 
 15 மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, 
தாங்களே அதற்குள் விழுகிறார்கள். 
 16 அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; 
அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது. 
 17 யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; 
மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.