சங்கீதம் 32
மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். 
 1 யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, 
யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ, 
அவர்கள் பாக்கியவான்கள். 
 2 யாருடைய பாவத்தைக்குறித்து, 
அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ, 
யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள். 
 3 நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, 
தினமும் என் அழுகையினால், 
என் எலும்புகள் பலவீனமாயிற்று. 
 4 இரவும் பகலும் 
உமது கரம் பாரமாயிருந்தது; 
ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல, 
என் பெலன் வறண்டுபோயிற்று. 
 5 அதின்பின் நான் என் பாவத்தை 
உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்; 
என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை. 
நான், “யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்” 
என்று சொன்னேன்; 
நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர். 
 6 ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் 
உம்மை நோக்கி மன்றாடட்டும்; 
பெருவெள்ளம் எழும்பும்போது 
நிச்சயமாய் அது அவர்களை அணுகாது. 
 7 நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; 
நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து, 
மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர். 
 8 யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி, 
நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்; 
நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன். 
 9 புத்தியில்லாத குதிரையைப் போலவோ, 
கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்; 
கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய, 
அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.” 
 10 கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை, 
ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ, 
அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது. 
 11 நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்; 
உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள்.