அத்தியாயம் 18
பில்தாதின் வார்த்தைகள் 
 1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 
 2 “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? 
புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். 
 3 நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, 
உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? 
 4 கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? 
கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? 
 5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 
அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 
 6 அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; 
அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். 
 7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். 
 8 அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, 
வலையின் சிக்கலிலே நடக்கிறான். 
 9 கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; 
பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.* 18:9 அவர்கள் அவர்களை ஜெயித்தார்கள்  
 10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், 
அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 
 11 சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, 
அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். 
 12 அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; 
அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். 
 13 அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; 
பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். 
 14 அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; 
அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். 
 15 அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், 
பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; 
கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும். 
 16 கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; 
மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். 
 17 அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், 
வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். 
 18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, 
பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 
 19 அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; 
அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை. 
 20 அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, 
கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.† 18:20 மேற்கிலிருந்த மக்கள் 
 21 அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; 
தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.