அத்தியாயம் 24
 1 சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, 
அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன? 
 2 சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, 
மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள். 
 3 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், 
விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். 
 4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, 
எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். 
 5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; 
வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். 
 6 துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, 
அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். 
 7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், 
உடையில்லாமல் இரவுதங்கி, 
 8 மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். 
 9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, 
தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். 
 10 அவனை உடையில்லாமல் நடக்கவும், 
பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும், 
 11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், 
தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள். 
 12 ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், 
குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; 
என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை. 
 13 அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; 
அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், 
அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள். 
 14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, 
ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, 
இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான். 
 15 விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: 
என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். 
 16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; 
அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள். 
 17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; 
அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 
 18 நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; 
தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், 
அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. 
 19 வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; 
அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். 
 20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; 
புழு திருப்தியாக அவனைத் தின்னும்; 
அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; 
அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். 
 21 பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, 
விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். 
 22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; 
அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை. 
 23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், 
அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; 
ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. 
 24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, 
பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, 
மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; 
கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். 
 25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, 
என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.