சங்கீதம் 10
 1 யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? 
துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? 
 2 துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் 
ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; 
அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 
 3 துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், 
பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான். 
 4 துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; 
அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. 
 5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; 
உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; 
தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான். 
 6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை 
என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 
 7 அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், 
கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; 
அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. 
 8 கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, 
மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; 
திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன. 
 9 தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; 
ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 
 10 திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான். 
 11 தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, 
எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்; 
தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான். 
 12 யெகோவாவே, எழுந்தருளும்; 
தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; 
ஏழைகளை மறக்காமலிரும். 
 13 துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, 
நீர் கேட்டு விசாரிப்பதில்லை; 
என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்? 
 14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், 
துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; 
நீர் பதிலளிப்பீர்; 
ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; 
திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 
 15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; 
அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும். 
 16 யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; 
அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள். 
 17 யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; 
அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர். 
 18 மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், 
தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் 
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய 
உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.