சங்கீதம் 36
இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். 
 1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; 
அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. 
 2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, 
தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். 
 3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; 
புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். 
 4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, 
நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, 
பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். 
 5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; 
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. 
 6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும், 
உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; 
யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 
 7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! 
அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 
 8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; 
உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 
 9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; 
உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 
 10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், 
செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் 
உமது நீதியையும் பாராட்டியருளும். 
 11 பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், 
துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. 
 12 அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; 
எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.