சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல். 
 1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; 
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். 
 2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; 
உமது கை என்னைத் தாங்குகிறது. 
 3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; 
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 
 4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, 
அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. 
 5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. 
 6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 
 7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; 
என் உடலில் ஆரோக்கியம் இல்லை. 
 8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; 
என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். 
 9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; 
என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை. 
 10 என் உள்ளம் குழம்பி அலைகிறது; 
என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது. 
 11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; 
என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். 
 12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; 
எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, 
நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். 
 13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், 
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். 
 14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். 
 15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; 
என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர். 
 16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; 
என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. 
 17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; 
என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 
 18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, 
என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன். 
 19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; 
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். 
 20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், 
நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். 
 21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; 
என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். 
 22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, 
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.