சங்கீதம் 74
ஆசாப் பாடின மஸ்கீல் என்னும் பாடல். 
 1 தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? 
உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? 
 2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், 
நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், 
நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும். 
 3 நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்; 
பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான். 
 4 உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, 
தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். 
 5 கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான். 
 6 இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும், 
சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள். 
 7 உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, 
உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து, 
அசுத்தப்படுத்தினார்கள். 
 8 அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, 
தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். 
 9 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; 
தீர்க்கதரிசியும் இல்லை; 
இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. 
 10 தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? 
பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? 
 11 உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; 
அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். 
 12 பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற 
தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. 
 13 தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, 
தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின்* 74:13 இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 தலைகளை உடைத்தீர். 
 14 தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, 
அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர். 
 15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; 
மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர். 
 16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; 
தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். 
 17 பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; 
கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர். 
 18 யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், 
மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். 
 19 உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; 
உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும். 
 20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; 
பூமியின் இருளான இடங்கள் 
கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. 
 21 துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; 
சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும். 
 22 தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; 
மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். 
 23 உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; 
உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது. 
*சங்கீதம் 74:13 74:13 இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1