சங்கீதம் 76
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். 
 1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; 
இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. 
 2 சாலேமில் அவருடைய கூடாரமும், 
சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. 
 3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், 
கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) 
 4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். 
 5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, 
உறங்கி அசந்தார்கள்; 
வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. 
 6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் 
இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. 
 7 நீர், நீரே, பயங்கரமானவர்; 
உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 
 8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், 
தேவனே நீர் எழுந்தருளினபோது, 
 9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; 
பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) 
 10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; 
மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். 
 11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; 
அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். 
 12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; 
பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.