சங்கீதம் 85
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். 
 1 யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, 
யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். 
 2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, 
அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா) 
 3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, 
உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர். 
 4 எங்கள் இரட்சிப்பின் தேவனே, 
நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், 
எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும். 
 5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? 
தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ? 
 6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி 
நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? 
 7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, 
உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 
 8 கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; 
அவர் தம்முடைய மக்களுக்கும் 
தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; 
அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக. 
 9 நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, 
அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. 
 10 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், 
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். 
 11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், 
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும். 
 12 யெகோவா நன்மையானதைத் தருவார்; 
நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும். 
 13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று, 
அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.