சங்கீதம் 97
 1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, 
திரளான தீவுகள் மகிழட்டும். 
 2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; 
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 
 3 நெருப்பு அவருக்கு முன்சென்று, 
சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது. 
 4 அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; 
பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. 
 5 யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, 
சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது. 
 6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; 
எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 
 7 சிலைகளை வணங்கி, 
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; 
தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 
 8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, 
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். 
 9 யெகோவாவே, பூமி அனைத்திற்கும் 
நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். 
 10 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; 
அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, 
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். 
 11 நீதிமானுக்காக வெளிச்சமும், 
செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 
 12 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, 
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.