சங்கீதம் 99
 1 யெகோவா ராஜரிகம்செய்கிறார், 
மக்கள் தத்தளிப்பார்களாக; 
அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், 
பூமி அசைவதாக. 
 2 யெகோவா சீயோனில் பெரியவர், 
அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர். 
 3 மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; 
அது பரிசுத்தமுள்ளது. 
 4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, 
தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; 
நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். 
 5 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, 
அவர் பாதத்தைப் பணியுங்கள்; 
அவர் பரிசுத்தமுள்ளவர். 
 6 அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், 
அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், 
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; 
அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார். 
 7 மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; 
அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் 
அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். 
 8 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, 
நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; 
நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், 
அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர். 
 9 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, 
அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; 
நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.