சங்கீதம் 108
தாவீது பாடிய பாடல். 
 1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; 
நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; 
என்னுடைய மகிமையும் பாடும். 
 2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், 
நான் அதிகாலையில் விழிப்பேன். 
 3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; 
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 
 4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், 
உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது. 
 5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; 
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 
 6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, 
உமது வலதுகரத்தினால் இரட்சித்து, 
எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும். 
 7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், 
ஆகையால் சந்தோஷப்படுவேன்; 
சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 
 8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; 
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், 
யூதா என்னுடைய செங்கோல். 
 9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; 
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; 
பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். 
 10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? 
ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? 
 11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? 
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ? 
 12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; 
மனிதனுடைய உதவி வீண். 
 13 தேவனாலே வெற்றி பெறுவோம்; 
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.