அத்தியாயம் 3
துன்பம் நிறைந்த இரவு 
 1 இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; 
தேடியும் நான் அவரைக் காணவில்லை. 
 2 நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, 
என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; 
தேடியும் நான் அவரைக் காணவில்லை. 
 3 நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: 
என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். 
 4 நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, 
என் ஆத்தும நேசரைக் கண்டேன்; 
நான் அவரை என் தாயின் வீட்டிலும், 
என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். 
 5 எருசலேமின் இளம்பெண்களே! 
எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை 
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, 
வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் 
உங்களுக்கு ஆணையிடுகிறேன். 
சாலோமொனின் வருகை 
மணவாளி 
 6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் 
வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, 
தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்? 
 7 இதோ, சாலொமோனுடைய படுக்கை; 
இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள். 
 8 இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, 
போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; 
இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது. 
 9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார். 
 10 அதின் தூண்களை வெள்ளியினாலும், 
அதின் தளத்தைப் பொன்னினாலும், 
அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்; 
அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம் 
நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. 
 11 சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், 
ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும், 
மனமகிழ்ச்சியின் நாளிலும், 
அவருடைய தாயார் அவருக்கு 
அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.