சங்கீதம் 5
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல். 
 1 யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், 
என்னுடைய தியானத்தைக் கவனியும். 
 2 நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; 
என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 
 3 யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; 
காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 
 4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; 
தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 
 5 வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; 
அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர். 
 6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; 
கொலை வெறியர்களையும் 
வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார். 
 7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, 
உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 
 8 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, 
எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். 
 9 அவர்கள் வாயில் உண்மை இல்லை, 
அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; 
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; 
தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 
 10 தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; 
அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; 
அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; 
உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே. 
 11 உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, 
எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; 
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; 
உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக. 
 12 யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, 
கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.