சங்கீதம் 6
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். 
 1 யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், 
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். 
 2 என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, 
நான் பெலனில்லாமல் போனேன்; 
என்னைக் குணமாக்கும் யெகோவாவே, 
என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 
 3 என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, 
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். 
 4 திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; 
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். 
 5 மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, 
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 
 6 என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; 
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, 
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 
 7 துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, 
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. 
 8 அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 
 9 யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; 
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 
 10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; 
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.