சங்கீதம் 115
தாவீதின் பாடல். 
 1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, 
உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். 
 2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே 
என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? 
 3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; 
தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். 
 4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், 
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. 
 5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; 
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 
 6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; 
அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 
 7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; 
அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; 
தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 
 8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், 
அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 
 9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; 
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 
 10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; 
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 
 11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, 
யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 
 12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், 
அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், 
அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். 
 13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், 
சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். 
 14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். 
 15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 
 16 வானங்கள் யெகோவாவுடையவைகள்; 
பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். 
 17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் 
யெகோவாவை துதிக்கமாட்டார்கள். 
 18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் 
யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். 
அல்லேலூயா.